கவிச்சாரல் கவிதைகள் தங்களை அன்புடன் வரவேற்கிறது🙏🏻 கவிச்சாரல் கவிதைகள்: thamil
thamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஜூன், 2020

தாயே வா! மொழியே வா!

அழகான குலமகள்
ஆதியில் பிறந்தவள்
இன்முகம் கொண்டவள்
ஈடில்லாத் தாயவள்
உண்மையின் பெயரிவள்

ஊக்கத்தின் உயிரிவள்
எங்கும் நிறைந்தவள்
ஏழுலகிலும் சிறந்தவள்
ஐம்பெருங் காப்பியங்களிலே
ஒளிரும் தேவதை

ஓலைச்சுவடியிலே பதிந்தாள்
ஔடத மகத்துவமிக்க
எங்கள் கன்னித்தமிழே
முச்சங்கம் வைத்துன்னை
சிங்காரமாய் வளர்த்திட்டோம்.

திருமகளின் திருவுருவே
ஆதியில்ல உமக்கு
அந்தம் ஏதம்மா
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குமுன்
தொலைத்திட்ட உம்மை

ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தோம்
இதோ இன்று
கீழடி என்ற
மூவடியைத் தோண்ட
மறைத்து வைத்திட்ட

உந்தன் புகழெல்லாம்
அணிவகுத்து வருகுதம்மா
குன்றாப்புகழ் தொல்காப்பியத்திலே
தொள்ளாயிரத்து இருநூறென்று
உன் மழலைப்பருவத்தின்

மங்காத புகழை
உச்சி முகர்ந்தோம்
சிலம்பும் மணிமேகலையும்
உந்தன் புகழ்பாட
சிந்தாமணியுடனே வளையாபதி

குண்டலகேசியிலே உதித்திருந்து
மொழி கொடுத்து
உயிர் கொடுத்த
எங்கள் அன்னையே
நீயிருக்கும் இடந்தேடி

காடு மலைமுகடெல்லாம்
உம்மைத் தேடியலைந்தோம்
தலைமீது மகுடமாய்
நாவிலே நரம்பென
உயிரிலே கலந்திருந்தாய்.

எங்களுக்குள் ஆட்சிபுரிந்து
அரியாசனமீதில் அமர்ந்திருந்தாய்
உம்மீது பித்தாகி
சித்தரெனத் திரிந்து
உம்மைக் கண்டுகொண்டோம்.

நாயகியே நற்றமிழே
கதிரொளித் திலகமிட்டு
காவிரிமேவும் கூந்தலோடு
கொங்குதமிழ்  மங்கையென
காசினி மீது

தாயே வருக
மொழியே வருக
என்றும் மங்காத
சங்கென முழங்கும்
செந்தமிழே வருக.
                     -நா.மணிகண்டன்.